காதலியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்து நாய்க்கு போட்டவருக்கு எய்ட்ஸ் - பரபரப்பு தகவல்கள்


காதலியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்து நாய்க்கு போட்டவருக்கு எய்ட்ஸ் - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 9 Jun 2023 11:33 AM GMT (Updated: 9 Jun 2023 12:05 PM GMT)

காதலியை கொன்றது குறித்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

மும்பை

மராட்டிய மாநிலம் மும்பை அருகே 36 வயது காதலியை 56 வயதுடைய காதலர் மனோஜ் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை குக்கரில் வேக வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதலியை கொன்றது குறித்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

எனக்கு சொந்த ஊர் போரி விலி ஆகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை இறந்து விட்டார். தாயும் இப்போது இல்லை. நான் கோரே பகுதியில் பால் பண்ணை வைத்து இருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் எனது பண்ணையை அகற்றி விட்டனர்.

இதனால் போரி விலி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன்கடையில் வேலை பார்த்தேன். அந்த சமயம் நியூமும்பை வாஷி பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு செல்வேன். 2010-ம்ஆண்டு மார்க்கெட்டில் அகமத் நகரை சேர்ந்த சரஸ்வதி வைத்யாவை பார்த்தேன். அவர் என்னிடம் தான் ஒரு அனாதை என்று கூறினார். இதனால் அவர் மேல் எனக்கு இரக்கம் ஏற்பட்டது. நானும் பெற்றோரை இழந்து தவித்ததால் சரஸ்வதி வைத்யாவை வீட்டில் வேலைக்கு உதவிக்காக அழைத்துச்சென்றேன்.

நான் அவளை ஒரு மகள் போல பார்த்துக்கொண்டேன். நாளடைவில் அவள் என்னை காதலிக்க தொடங்கினாள். பின்னர் எங்களுக்குள் காதல் வளர்ந்தது. இதனால் கணவன்- மனைவி போல வாழ ஆசைப்பட்டு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மீரா ரோட்டில் உள்ள கீதா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். 2 ஆண்டுகள் கழித்து அதே கட்டிடத்தில் 7- வது மாடியில் உள்ள வீட்டில் குடிபெயர்ந்தோம்.

தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் எங்களது வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்த நிலையில் தான் எனக்கு வேலைபறிபோனது. வருமானத்துக்கும் கஷ்டப்பட்டோம். அப்போது தான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் நான் நிம்மதி இழந்தேன். இதனால் அவளை விட்டு வைத்தால் நன்றாக இருக்காது என நினைத்தேன். கடந்த 4-ந்தேதி எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே நான் அவளை அடித்து உதைத்தேன். இதில் அவள் இறந்து விட்டாள்.

பயந்து போன நான் என்ன செய்வது என தெரியாமல் விழித்தேன். அப்போது தான் டெல்லியில் காதலன் ஒருவர் காதலி ஷரத்தா வாக்கரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தது நினைவுக்கு வந்தது.நாமும் அதேபோல செய்தால் என்ன? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதற்காக மரம் அறுக்கும் ரம்பம் மற்றும் கத்தியை வாங்கி வந்தேன்.

சரஸ்வதி உடலை முதலில் 3 துண்டுகளாக வெட்டினேன். இதனால் வீடு முழுவதும் ரத்தம் வழிந்தது. அந்த ரத்தத்தை வாளியில் தண்ணீர் எடுத்து கழுவினேன். உடல் உறுப்புகளை ரம்பம், கத்தியால் சிறிது சிறிதாக வெட்டி குக்கரில் வேக வைத்தேன்.அதனை வெந்நீரில் கழுவினேன். எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் தான் ரெயில்வே தண்டவாளம் உள்ளது.அங்கு எப்போதும் நாய்கள் நிறைய இருப்பதை பார்த்து இருக்கிறேன்.

குக்கரில் வேக வைத்த உறுப்புகளை எடுத்துசென்று அந்த நாய்களுக்கு உணவாக போட்டேன். சம்பவத்தன்றும் நான் இதற்காக வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தேன்.

அந்த சமயம் அடுக்குமாடி குடியிருப்பு நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த போலீசார் என்னை கைது செய்து விட்டனர். அவர்களிடம் சரஸ்வதி விஷம் குடித்து விட்டு தற்கொலை செய்தாக கூறினேன்.

போலீசுக்கு பயந்து போய் தான் இதனை வெளியில் சொல்லாமல் அவள் உடலை துண்டு துண்டாக வெட்டினேன் என சொன்னேன். ஆனால் இதனை போலீசார் நம்பவில்லை.

பின்னர் நான் சரஸ்வதியை கொன்றதை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு மனோஜ் சனோ தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மனோஜ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

தனக்கு எய்ட்ஸ் இருந்ததால் அதன் பாதிப்பு சரஸ்வதிக்கும் இருக்கும் என்றும் ஒருவேளை தான் இறந்து விட்டால் அவளுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள்? எனக்கருதியும் இந்த கொடூர கொலையை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் காதலி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கைதான மனோஜ் சனோவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அவரை 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையின் போது கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் கொலையுண்ட சரஸ்வதியின் உடலை 20 துண்டுகளாக மனோஜ் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பாதி உடல் பாகங்களை தான் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனை போர்வை மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி போலீசார் எடுத்து சென்று ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சில பாகங்களை நாய்களுக்கு மனோஜ் உணவாக போட்டு விட்டதால் மற்ற பாகங்கள் என்ன ஆனது என தெரியவில்லை. அதனை கழிவறைக்குள் வீசி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்த பாகங்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story