மணிப்பூர்: வன்முறை பாதித்த மக்களை நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி


மணிப்பூர்:  வன்முறை பாதித்த மக்களை நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி
x

மணிப்பூரில் வன்முறை பாதித்த மக்களை நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார்.

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார். எனினும், மணிப்பூரின் சுராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை பிஷ்ணுப்பூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் செல்ல கூடிய நிலையில், வழியில் தாக்குதல் நடத்த கூடிய ஆபத்து உள்ளது என்றும் அவரை பாதுகாக்கவே தடுத்து நிறுத்தப்பட்டார் என போலீசார் கூறியுள்ளனர். காவல்துறை தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி இம்பால் நகருக்கு திரும்பினார்.

அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தான் முதன்மையானது. ஒற்றுமையாக இருப்பதே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் என்றார். இதனை தொடர்ந்து, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அவர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்து உள்ளார் என தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில், மணிப்பூரின் இம்பால் நகரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்களை ராகுல் காந்தி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அந்த முகாம்களில் தங்கியிருந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதுபற்றி கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறும்போது, எங்களை ஏன் அரசாங்கம் நிறுத்தியது என எங்களுக்கு தெரியாது. ராகுல் காந்தியின் பயணம் அமைதி முயற்சிகளை வலுப்படுத்தும். நாங்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றோம்.

அனைத்து பகுதிகளிலும் நிலைமை படுமோசம் என்ற அளவில் உள்ளது. அவர்கள் (முகாம்களில் உள்ள மக்கள்) என்ன கூறுகிறார்கள்? என நாம் கவனிக்க வேண்டும். ராகுல் காந்தி ஒவ்வொருவரும் கூறும் விசயங்களை கவனிக்கிறார்.

அமைதி வரும் என்றும் அதனால் நீங்கள் யாரும் வருத்தப்பட கூடாது என்றும் ராகுல் காந்தி ஒரு செய்தியை அவர்களுக்கு தருகிறார். அவர்களுடன் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் என வேணுகோபால் கூறியுள்ளார். மணிப்பூரில் கலவரம் பரவியதில் இருந்து, 300-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 50 ஆயிரம் பேர் வரை தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story