திருமணமான 6 மாதத்தில் காதல் மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை; மறுநாள் கணவனும் தற்கொலை


திருமணமான 6 மாதத்தில் காதல் மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை; மறுநாள் கணவனும் தற்கொலை
x

மருமகன் மஞ்சுநாத் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக ரமாதேவியின் பெற்றோர் ஜிஆர்பி போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

விசாகபட்டினம்,

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா கிராமத்தைச் சேர்ந்த பாலபுள்ளையா, ஓபுலம்மா தம்பதியின் மகன் மஞ்சுநாத் (27).

புட்லூர் மண்டலம் கருச்சிந்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமாஞ்சநேயுலு - லட்சுமிதேவியின் மகள் ரமாதேவி (24).

மஞ்சுநாத்தும் ரமாதேவியும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் முதலில் சம்மதிக்கவில்லை. இருவரும் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை சலவாரிப்பள்ளி கிராமம் அருகே ரெயில் முன் பாய்ந்து ரமாதேவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் கணவருடன் மொபைலில் பேசி உள்ளார்.

மனைவி ரமாதேவி இறந்த செய்தியறிந்த மஞ்சுநாத்தும் திங்கள்கிழமை இரவு இரண்டு முறை ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். ஆனால் குடும்பத்தினர் அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை 3 மணியளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மஞ்சுநாத் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன்பின் தாடிபத்திரி ரெயில் நிலையம் அருகே வந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மருமகன் மஞ்சுநாத் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக ரமாதேவியின் பெற்றோர் ஜிஆர்பி போலீசில் புகார் அளித்து உள்ளனர்.


Next Story