மணிப்பூர் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் வழங்கிய 'நடுநிலை தீர்வு' - ஜெய்ராம் ரமேஷ் தகவல்


மணிப்பூர் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் வழங்கிய நடுநிலை தீர்வு - ஜெய்ராம் ரமேஷ் தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2023 4:13 PM GMT (Updated: 3 Aug 2023 4:19 PM GMT)

'இந்தியா' கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு 'நடுநிலை தீர்வு' வழங்கப்பட்டுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விதி எண் 267-ன் கீழ் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், விதி எண் 176-ன் கீழ் குறுகிய கால விவாதம் நடத்துவதற்கே மத்திய அரசு சம்மதித்துள்ளது.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில் இருந்தே அவை தொடர்ந்து முடங்கி வருகிறது. வழக்கமான அவை நடவடிக்கைகளை நடத்த முடியாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை சபாநாயகர் ஜகதீப் தன்கரும் திணறி வருகின்றனர்.

இதனிடையே மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பதிலளிக்க வைக்க எதிர்க்கட்சிளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதன் மீதான விவாதம் ஆகஸ்ட் 8-ந்தேதி தொடங்கும் என்றும் பிரதமர் மோடி ஆகஸ்ட் 10-ந்தேதி பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் அமளி தொடர்ந்து வருவதால், விவாதம் எதுவும் இன்றி பல்வேறு முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளும் வகையில் 'இந்தியா' கூட்டணி சார்பில் அரசுக்கு ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மணிப்பூர் தொடர்பாக மாநிலங்களவையில் எந்தவித தடையும் இன்றி விவாதம் நடத்த இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவை தலைவருக்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு 'நடுநிலை தீர்வு' வழங்கப்பட்டுள்ளது. இதை மோடி அரசு ஏற்று கொள்ளும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story