சுமை தூக்கும் தொழிலாளியை தேடி வந்த அதிர்ஷ்டம்: கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசு


சுமை தூக்கும் தொழிலாளியை தேடி வந்த அதிர்ஷ்டம்:  கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசு
x
தினத்தந்தி 22 March 2023 9:45 PM GMT (Updated: 22 March 2023 9:45 PM GMT)

திருவனந்தபுரத்தில் தொழிலாளி கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.75 லட்சம் பரிசு விழுந்தது.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால் (வயது 55). சுமை தூக்கும் தொழிலாளி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் தன்னுடைய சகோதரர் மற்றும் மாமா குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். பாபுலாலுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இவர் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா? என காத்துக் கொண்டிருந்தார்.

அங்கு தினமும் கடினம்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கேரள அரசின் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது வழக்கம். அவரிடம் எப்போதாவது பாபுலால் லாட்டரி சீட்டு வாங்குவது உண்டு.

அதன்படி நேற்று முன்தினம் அங்கு வந்த இளம்பெண், குலுக்கல் நடைபெறும் நாள் நெருங்கி விட்டது. ஆனால் லாட்டரி சீட்டு அதிகமாக விற்பனையாகாமல் உள்ளது என்றும், எனவே 2 லாட்டரிகளை வாங்குமாறு பாபுலாலிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார். அதற்கு அவர் இப்போது பணம் தேவையில்லை, பின்னர் தந்தால் போதும் என்று கூறியதோடு பாபுலாலிடம் 2 லாட்டரி சீட்டுகளை கொடுத்து விட்டு சென்றார்.

இந்தநிலையில் பாபுலால் வைத்திருந்த லாட்டரிக்கு நேற்று முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்தது. கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததை அறிந்த தொழிலாளி மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். இது தன்னை தேடி வந்த அதிர்ஷ்டம் என அவர் கூறினார்.


Next Story