மங்களூருவில் அரசு அலுவலகங்களில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா திடீர் ஆய்வு


மங்களூருவில் அரசு அலுவலகங்களில்  மந்திரி கிருஷ்ண பைரேகவுடா திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:46 PM GMT)

மங்களூருவில் உள்ள அரசு அலுவலகங்களில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா திடீர் ஆய்வு செய்தார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு நேற்று காலை வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா வந்தார். இதையடுத்து மங்களூரு தாலுகா அலுவலகத்திற்கு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை மந்திரி கேட்டறிந்தார். பின்னர் படீல் பகுதியில் கட்டப்படும் புதிய கலெக்டர் அலுவலக பணி மற்றும் உல்லால் பகுதியில் உள்ள சோமேஸ்வர், பெட்டம்பாடி பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா ஆய்வு செய்தார்.

சோமேஷ்வரா பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு சென்ற மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கிராம நிர்வாக அதிகாரி லாவண்யாவிடம் அங்குள்ள விவரங்கள் குறித்தும், பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் உல்லால் தாலுகா நாட்டிகல் பகுதிக்கு சென்ற மந்திரி உல்லால் தாலுகா அதிகாரிகள், மற்றும் பொதுமக்களிடம் பிரச்சினைகள் குறித்தும் அரசின் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மங்களூரு தாலுகா அலுவலகத்தில் உள்ள பழைய ஆவணங்கள் உள்ள அறையை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நேரில் பார்வையிட்டு அங்குள்ள ஆவணங்கள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆவணங்களை எவ்வாறு ஸ்கேனிங் செய்வது என்பது குறித்தும், உடனடியாக அந்த ஆவணங்களை டிஜிட்டல் மூலம் புதுப்பித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா உத்தரவிட்டார்.


Next Story