ராகுல்காந்தி தண்டனை ரத்தாகுமா? மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை


ராகுல்காந்தி தண்டனை ரத்தாகுமா? மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
x

அவதூறு வழக்கில் தண்டனையை எதிர்த்த ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 23-ந் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவுடன், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என 2 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார்.

ராகுல் காந்தியின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. அதுவரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கவும், ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டது. அடுத்த விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story