மோட்டார் சைக்கிள் சாகசம்; வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் சாகசம்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:47 PM GMT)

மைசூருவில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசாா் கைது செய்தனர்.

மைசூரு

மைசூரு டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

மேலும் இந்த சாகசத்தால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்தநிலையில் மைசூரு ஊட்டன ஹள்ளி சிக்னல் அருகே மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அவரை வாக்கி டாக்கி மூலம் எச்சரித்தார்.

ஆனால் அதனை அந்த நபர் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் அந்த நபர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

அவரை போலீசார் ஜீப்பில் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் மைதனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மனோஜ் (வயது20) என்பதும், மோட்டார் சைக்கிள் சாகசத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வி.வி,புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story