மோட்டார் சைக்கிள் - கார் மோதல்; புதுமண தம்பதி பலி


மோட்டார் சைக்கிள் - கார் மோதல்; புதுமண தம்பதி பலி
x

கடூர் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுமண தம்பதி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு;

புதுமண தம்பதி

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹஸ்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்(வயது 26). இதேபோல சிவமொக்கா மாவட்டம் பொம்மனஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா(23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் புதுமண தம்பதிகளான இவர்கள் நேற்றுமுன்தினம் கடூர் அருகே உள்ள கல்லாபுரா கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அங்கு நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் சிவபுரா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே கார் ஒன்று வந்தது.

கார் மோதி விபத்து

இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்ைட இழந்த அந்த காா் தாறுமாறாக ஓடி ஆனந்த்தின் மோட்டாா் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ரஞ்சிதா உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கடூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிக்கமகளூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சோகம்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து கடூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆனந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story