நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் படுகொலை- கணவர் வெறிச்செயல்


நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் படுகொலை- கணவர் வெறிச்செயல்
x

பெங்களூரு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட கணவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

தேவனஹள்ளி-

பெண் குத்திக்கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா தொட்டசன்னே கிராமத்தை சேர்ந்தவர் முனி ஆஞ்சனேயா. இவரது மனைவி ரஜனி. இந்த தம்பதிக்கு 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்து முனிக்கும், ரஜனிக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த முனி வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து தனது மனைவி ரஜனியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரஜனி முதுகு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து முனி தப்பி ஓடிவிட்டார். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரஜனி நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்து விட்டார்.

நடத்தையில் சந்தேகம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கும், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரஜனியின் உடலையும் கைப்பற்றி தேவனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை முனி கொலை செய்தது தெரியவந்துள்ளது. முனியின் வீட்டில் சேகர் என்பவர் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அவருடன் ரஜனி நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சேகருடன் தனது மனைவிக்கு கள்ளத்தொடர் இருப்பதாக கருதி முனி தினமும் சண்டை போட்டு வந்துள்ளார். அதுபோல், நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில் ரஜனி கொலை செய்யப்பட்டு இருந்தார். இதுகுறித்து தேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட முனியை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story