நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறையிடம் ராகுல் காந்தி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கும், வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நேற்று முன் தினம் சம்மன் விடுத்து இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி வரும் 2-ஆம் தேதியும், சோனியா காந்தி வரும் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், தான் வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறையிடம் ராகுல் காந்தி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி அவகாசம் கோரியதை அடுத்து, வரும் 13 ஆம் தேதி (திங்கள்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை புதிய சம்மனை விடுத்துள்ளது.
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் விரிவான விவரம்;
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது.
அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது. இதன்மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ரூ.90 கோடி கடனுக்கு சமமான பங்குகளை பெற்றதாகவும், இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. சுப்பிரமணிய சாமியின் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர்கள் பதில்மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
அத்துடன், யங் இந்தியா மீது வருமான வரித்துறையும் விசாரணை நடத்தியது. இவ்விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக பணமோசடி வழக்கு ஒன்றை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இந்த வழக்கில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை கடந்த மாதம் விசாரணை நடத்தியது. இந்தநிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பியது. இவ்வழக்கில் இவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது இதுவே முதல்முறை ஆகும்.