பட்டியாலா சிறையில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று விடுதலை


பட்டியாலா சிறையில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று விடுதலை
x

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா சிறையில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று விடுதலையாகிறார்.

சண்டிகர்,

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில், நவ்ஜோத் சிங் சித்து நடத்திய தாக்குதலில், படுகாயமடைந்த குர்ணாம்சிங் உயிரிழந்தார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியானா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நவ்ஜோத் சிங் சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சித்து, கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு பட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் நவ்ஜோத் சிங் சித்து தண்டனை குறைப்பு பெற்று இன்று விடுதலையாகிறார். அவரை வரவேற்க, அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.




Next Story