திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு.!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு.!
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கடந்த 15 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெற்றது. ஒன்பதாவது மற்றும் கடைசி நாளான இன்று காலை கோயில் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு வராகசாமி கோயில் முகமண்டபத்தை அடைந்தார். அவருடன் சக்கரத்தாழ்வாரும் தனி பல்லக்கில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சக்கரத்தாழ்வாரை கோயில் திருக்குளத்திற்கு கொண்டு சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள், மூன்று முறை அவரை தண்ணீரில் மூழ்கச் செய்து தீர்த்தவாரி புனித நீராடல் நிகழ்வை நடத்தினர். அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர். பின்னர் உற்சவர்கள் ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். அத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.


Next Story