இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x

கோப்புப்படம்

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கிய கடந்த ஏப்ரல் 6-ந்தேதி நிறைவு பெற்றது.

இந்த நிலையில் தற்போது இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வுக்கு நாளை முதல் வருகிற ஏப்ரல் 13-ந்தேதி இரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


Next Story