நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு


நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2023 9:20 AM GMT (Updated: 19 Sep 2023 9:23 AM GMT)

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

கடந்த 2 வருடமாக நீட் தேர்வு தாமதமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வருடம் மே மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டு நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழகத்திலும் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 5-ந் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதை போல உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதல் தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஜே.இ.இ. முதல் தேர்வு ஜனவரி மாதம் 24-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜே.இ.இ. 2-ம் தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story