நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை; மாநகராட்சிக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை; மாநகராட்சிக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் நிமான்ஸ் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் வளாகத்தில் ஏரளாமான தெரு நாய்கள் சுற்றி திரிவதாகவும், அந்த நாய்களால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே நிமான்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சிறுமியான நிகாரிகா பி.ராவ் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி பண்டித் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அப்போது சிறுமி சார்பில் ஆஜரான வக்கீல், நிமான்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் அரசு குடியிருப்புகளை சுற்றி தெரு நாய்கள் சுற்றி திரிவதாகவும், அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்,

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நாய்களை கட்டுப்படுத்த கடந்த 2021-ம் ஆண்டே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். இதை கேட்ட நீதிபதி பண்டித், பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தொந்தரவு கொடுக்கும் விதமாக நிமான்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றி திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும், தெருநாய்களுக்கு ரேபிட் ஊசி செலுத்த வேண்டும், தெரு நாய்களை சுற்றி திரிவதை தடுக்க மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story