புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறப்பு - பூரி கடற்கரையில் நாடாளுமன்ற மணல் சிற்பம்..!


புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறப்பு - பூரி கடற்கரையில் நாடாளுமன்ற மணல் சிற்பம்..!
x

புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்படுவதையொட்டி பூரி கடற்கரையில் நாடாளுமன்ற மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடிசா,

ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து மக்களவைக்குள் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள்.

புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார். அத்துடன், புதிய நாடாளுமன்றம் தொடர்பான ஒரு வீடியோவை பகிர்ந்த அவர், மக்கள் தங்களின் எண்ணங்களையும். கருத்துகளையும் தங்கள் குரலில் பதிவிட்டு, எனது நாடாளுமன்றம் எனது பெருமை என்ற ஹேஷ்டேக்குடன் பகிரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசாவைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் புதிய நாடாளுமன்ற போன்ற மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த மணல் சிற்பத்தை மக்கள் கண்டு களித்து செல்கின்றனர். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் சுதர்சன் பட்நாயக் டுவிட்டரில் "எனது நாடாளுமன்றம் எனது பெருமை'' என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிடம், புதிய இந்தியாவின் சின்னம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தேசத்திற்கான உங்கள் அர்ப்பணிப்புக்காக உங்களுக்கு பாராட்டுக்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக பாராளுமன்றம் கட்டப்பட்டதை நினைத்து எங்கள் இதயம் பெருமிதத்தால் நிறைந்துள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story