புது காலணியா...? உற்சாகத்தில் படமெடுத்து ஆடியபடி வந்த பாம்பால் பரபரப்பு


புது காலணியா...? உற்சாகத்தில் படமெடுத்து ஆடியபடி வந்த பாம்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Oct 2023 10:29 PM GMT (Updated: 9 Oct 2023 10:46 PM GMT)

காலணி ஒன்றில் இருந்து சிறிய நாக பாம்பு படமெடுத்து ஆடியபடி வெளிவந்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

சமூக ஊடகத்தில் நகைச்சுவையை ஊட்ட கூடிய மற்றும் அறிவுறுத்தலை வழங்க கூடிய வீடியோக்கள் வெளிவருவது வழக்கம். அந்த வகையில், இந்திய வன துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர் எக்ஸ் சமூக ஊடக பதிவில் பதிவொன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், பெண் ஒருவரின் புது காலணி ஒன்றில் இருந்து சிறிய நாக பாம்பு ஒன்று வெளியே வருகிறது. வீடியோ எடுப்பவரை நோக்கி சீறியபடி அது காணப்பட்டது.

அந்த பதிவில், புதிய காலணியை போட்டு கொள்ள முயற்சித்த நாக பாம்பு என தெரிவித்து விட்டு, நகைச்சுவையை தவிர்த்து, கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைக்காலம் நெருங்கி வருகிறது என தெரிவித்து உள்ளார். இதற்கு பலரும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆடைகள் உள்ளிட்டவற்றில் கவனமுடன் ஆய்வு செய்ய வேண்டும் என ஒருவரும், காலணிகளை கீழே உதறிவிட்டு அணிந்து கொள்ள வேண்டும் என்று நல்ல காரணத்திற்காக கற்பிக்கப்படுகிறோம் என மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர்.

சில நாட்களுக்கு முன், கேரளாவில் ஹெல்மெட் ஒன்றில் இருந்து சிறிய நாக பாம்பு ஒன்று வெளியே வந்தது. திரிச்சூரை சேர்ந்த சோஜன் என்ற நபர் அதனை பார்த்து அதிர்ந்து போனார்.

இதன்பின் வன துறைக்கு தகவல் தெரிவித்து, பாம்பு பிடிக்கும் வீரர் லிஜோ என்பவர் உதவியுடன் அதனை காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர். இதனால், மழை காலங்களில் காலணிகள், கழிவறைகள் மற்றும் சமையல் அறைகளில் கூட எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.


Next Story