இரும்பு பொருட்கள் எதுவும் இல்லை.. கற்களை வைத்தே முழுவதும் கட்டப்பட்ட ராமர் கோவில்... ஏன் தெரியுமா?


இரும்பு பொருட்கள் எதுவும் இல்லை.. கற்களை வைத்தே முழுவதும் கட்டப்பட்ட ராமர் கோவில்... ஏன் தெரியுமா?
x
தினத்தந்தி 20 Jan 2024 1:11 PM GMT (Updated: 20 Jan 2024 1:22 PM GMT)

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு இரும்பு பொருட்கள் எதுவுமே பயன்படுத்தவில்லை என்றும் வெறும் கற்களை வைத்தே கோவில் முழுவதும் கட்டப்பட்டு இருப்பதாக அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சென்னை,

அயோத்தியில் பால ராமருக்காக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் தொன்மை மற்றும் இந்திய பாரம்பரிய கட்டிடக் கலையின் கலவையாக கட்டப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகள் தாக்குபிடிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியாக இந்த கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதாவது, இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் என்று ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிர்பேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கட்டுமான பணிகள் குறித்து மேலும் அவர் கூறியதாவது:

இதற்கு முன்பு இல்லாத வகையில், ராமர் கோவில் கட்டுமானங்கள் அமைந்துள்ளன. இந்தியாவின் மூத்த விஞ்ஞானிகளும் கட்டுமான பணிகளில் பங்களித்தனர். இஸ்ரோ தொழில் நுட்படம் கூட தேவையான இடத்தில் பயன்படுத்தப்பட்டது. ராமர் கோயிலின் கட்டிடக் கலை நாகர் ஷைலி அல்லது வட இந்திய கோவில்களுக்கான தோற்றத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பை 15 தலைமுறைகளாக கோவில் வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா என்பவர் மேற்கொண்டார். இந்த குடும்பத்தினர் 100- க்கும் மேற்பட்ட கோவில்களை வடிவமைத்து கொடுத்துள்ளனர்.

ராமர் கோவிலுக்கான வடிவமைப்பை செய்து கொடுத்த சோம்புரா என்பவர் கூறுகையில், " ஸ்ரீராமர் கோவிலின் வடிவமைப்பு எங்கும் காண முடியாத வகையில் அரிதான ஒன்றாக இருக்கும். இந்தியா மட்டும் இன்றி பூமியில் எங்குமே பார்க்க முடியாததாகவும் கற்பனை செய்ய முடியாத அளவிலும் தனித்த படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

ராமர் கோவில் பகுதி 2.7 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகவும். இதில் கட்டுமான பணிகள் 57 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளன. மூன்றடுக்குகளாக இந்தக் கோவில் அமைந்துள்ளது. இரும்பின் ஆயுட் காலம் 80 -90 ஆண்டுகள் மட்டுமே என்பதால் இந்தக் கோவில் கட்டுமான பணிக்கு இரும்பு பயன்படுத்தவில்லை. எக்குவும் பயன்படுத்தவில்லை. ராமர் கோவிலின் உயரம் 161 அடியாக இருக்கும். குதுப் மினாரின் உயரத்தில் 70 சதவீதம் கொண்டது ஆகும். தரமான கிரனட், மணற்கல் மற்றும் மார்பிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிமெண்ட் எதிலுமே பயன்படுத்தப்படவில்லை. கற்களை இணைக்கும் பகுதிக்கு கூட சிமெண்டுகளோ சுண்ணாம்பு சாந்தோ பயன்படுத்தவில்லை என்று கட்டுமான பணிகளை மேற்கொண்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.


Next Story