பீகாரில் 3 பேர் பலியான விவகாரம்: கயாவில் பீரங்கி குண்டு வீசவில்லை - ராணுவம் விளக்கம்


பீகாரில் 3 பேர் பலியான விவகாரம்: கயாவில் பீரங்கி குண்டு வீசவில்லை - ராணுவம் விளக்கம்
x

பீகாரில் 3 பேர் பலியான விவகாரத்தில் தெய்ரி தம்ரியில் பீரங்கி குண்டு வீசவில்லை என ராணுவம் அறிவித்து உள்ளது.

பாட்னா,

பீகாரின் கயா மாவட்டத்துக்கு உட்பட்ட தெய்ரி தம்ரியில் ராணுவத்தின் பயிற்சிக்களம் உள்ளது. இந்த களத்தின் அருகே நேற்று முன்தினம் மர்ம பொருள் வெடித்து ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

ராணுவ வீரர்கள் பயிற்சியின்போது பீரங்கி குண்டுவெடித்து இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் தெய்ரி தம்ரியில் பீரங்கி குண்டு வீசவில்லை என ராணுவம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தனாபூர் கண்டோன்மென்ட் நிர்வாகி கர்னல் துஷ்யந்த் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தெய்ரி தம்பரி பயிற்சிக்களத்தில் பீரங்கி சோதனைக்காக தினசரி அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் அனுமதி பெறப்படுகிறது. ஆனால் மார்ச் 8-ந்தேதி பயிற்சிக்காக எந்த அனுமதியும் கேட்கவில்லை. அந்தவகையில் சம்பவத்தன்று அங்கு பீரங்கி குண்டு எதுவும் வீசப்படவில்லை' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேநேரம் இது ஏற்கனவே விழுந்து வெடிக்காமல் கிடந்த பீரங்கி குண்டு வெடித்தது அல்லது உலோக கழிவுகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிவிபத்தாக இருக்கக்கூடும் என கூறியுள்ள ராணுவம், இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உதவி வருவதாகவும் கூறியுள்ளது.


Next Story