நுழைவாயில் கதவை திறக்க தாமதம்: காவலாளியை தாக்கிய பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்


நுழைவாயில் கதவை திறக்க தாமதம்: காவலாளியை தாக்கிய பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
x

Image Courtacy: ANI

நுழைவு வாயிலை திறக்க தாமதமானதால் காவலாளியை தாக்கிய பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாவட்டம் ஜேபி விஸ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு பாவ்யா ராய் என்ற பெண் ஒருவர் தனது காரில் வந்துள்ளார். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கதவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் காரை விட்டு இறங்கி பணியில் இருந்த காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை தாக்கியுள்ளார். பின்னர், 'பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்' என கூறிய அப்பெண் பீகாரி சமூகம் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். காவலாளியை பெண் தாக்குவதும், அவதூறாக பேசும் வீடியோவும் சமூகவலைதளத்தில் பரவி வைரலானது.

இந்த சம்பவம் குறித்து பணியில் இருந்த காவலாளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து பணியில் இருந்த காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணின் மீது ஐபிசி 153ஏ, 323, 504, 502(2) மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஜேபி விஸ் நகர் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Next Story