மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பு: ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு


மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பு: ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
x
தினத்தந்தி 3 Oct 2022 6:45 PM GMT (Updated: 3 Oct 2022 6:46 PM GMT)

மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு விளக்கம் கேட்டு சட்டசபை செயலாளர் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளார்.

பெங்களூரு:

கட்சி மாறி வாக்களிப்பு

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கோலார் தொகுதி எம்.எல்.ஏ.வாக சீனிவாஸ் கவுடாவும், துமகூரு மாவட்டம் குப்பி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக குப்பி சீனிவாசும் இருந்து வருகிறார்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்கள் மீது 2 எம்.எல்.ஏ.க்களும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். மேலும் அவர்கள் 2 பேரும் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து வேறு கட்சியில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், கர்நாடகத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த வேட்பாளருக்கு்ஆதரவாக வாக்களிக்காமல், சீனிவாஸ் கவுடா, காங்கிரஸ் வேட்பாளருக்கும், குப்பி சீனிவாஸ் பா.ஜனதா வேட்பாளருக்கும் ஆதரவாக வாக்களித்தனர். இதுதொடர்பாக சபாநாயகரிடம் 2 பேர் மீதும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கொறடா புகார் அளித்திருந்தார்.

2 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு

மேலும் 2 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபை செயலாளர் விசாலாட்சியிடம் ஜனதாதளம் (எஸ்) சாா்பில் புகாரும் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த விவகாரம் தொடர்பாக சீனிவாஸ் கவுடா மற்றும் குப்பி சீனிவாசுக்கு சட்டசபை செயலாளா விசாலாட்சி நோட்டீசு அனுப்பி வைத்துள்ளார்.

அதில், கட்சி மாறி வாக்களித்தது குறித்து எழுத்து பூர்வமாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று 2 எம்.எல்.ஏ.க்களுக்கும் செயலாளர் விசாலாட்சி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story