நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் விவரம் வெளியானது... கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உயர்வு...!


நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் விவரம் வெளியானது... கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உயர்வு...!
x

இந்தியாவில் கடந்த நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்து வருகிறது. 2017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்கு சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் இருந்து வந்தது.

எனினும், கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கு பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வசூல் விவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் ரூ.1.45 லட்சம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு கூடுதலான ஜி.எஸ்.டி. வசூலை, தொடர்ந்து 9-வது மாதம் ஆக ஈட்டி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1.72 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும்.

2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story