ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய ஒட்டுநர்களின் உடல்நிலை நிலை என்ன..?


ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய ஒட்டுநர்களின் உடல்நிலை நிலை என்ன..?
x

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சிக்கிய ரெயில்களின் ஓட்டுநர்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

புவனேஷ்வர்,

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது. இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதி தடம்புரண்டதால் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான ரெயில் விபத்தாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதேநேரம் காயம் அடைந்தவர்கள் பாலசோர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். எனவே காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சிக்கிய ரெயில்களின் ஓட்டுநர்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, இரண்டு விரைவு ரெயில்களின் ஓட்டுநர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், ஒரு ரெயில் ஓட்டுநர் மொஹாந்தி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து திங்கள்கிழமை மாற்றப்பட்டுவிட்டதாகவும் மற்றொரு ரெயில் ஓட்டுநர் பெஹேராவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவைசிகிச்சை நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோரமண்டல் விரைவு ரெயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளராக மொஹாந்தி, பெஹேரா இருவரும் புவனேஸ்வரத்தில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தங்களது தனியுரிமையைப் பாதுகாக்குமாறும், ஓட்டுநர்கள் இருவரும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் குணமடைந்து வருவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும், இந்த விபத்துக்கு, ரெயில் ஓட்டுநர்களை குற்றம்சாட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரெயில் ஓட்டுநர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story