நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் சிக்கன நடவடிக்கையால் ரூ.801 கோடி சேமிப்பு


நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் சிக்கன நடவடிக்கையால் ரூ.801 கோடி சேமிப்பு
x

சபாநாயகரின் சிக்கன நடவடிக்கைகளால், கடந்த 4 ஆண்டுகளில், நடப்பு 17-வது மக்களவை ரூ.801 கோடியை சேமித்துள்ளது.

பட்ஜெட் ஒதுக்கீட்டில் கால்பங்கு சேமிப்பு

நாடாளுமன்றத்தின் செலவுகளுக்கு ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்ட தொகையில், தற்போதைய 17-வது மக்களவை ரூ.801 கோடிைய சேமித்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கூறினார். 17-வது மக்களவை, 2019-ம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. அதன் சபாநாயகராக ஓம்பிர்லா பணியாற்றி வருகிறார்.

கடந்த 2021-2022 நிதி ஆண்டில் ரூ.258 கோடியே 47 லட்சமும், 2022-2023 நிதி ஆண்டில் ரூ.132 கோடியே 60 லட்சமும் மக்களவை சேமித்தது. மொத்தத்தில் 4 ஆண்டுகளில், ரூ.801 கோடி சேமித்துள்ளது. இது, 4 ஆண்டுகளாக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் கால்பங்கு ஆகும்.

முந்தைய மக்களவை

இதற்கு முன்பு, 13 மாதங்கள் மட்டுமே நீடித்த 12-வது மக்களவை, பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.7 கோடியே சேமித்தது. 13-வது மக்களவை (1999-2004) ரூ.99 கோடியே 52 லட்சமும், 14-வது மக்களவை (2004-2009) ரூ.145 கோடியே 7 லட்சமும், 15-வது மக்களவை (2009-2014) ரூ.94 கோடியே 17 லட்சமும், 16-வது மக்களவை (2014-2019) ரூ.461 கோடியும் சேமித்தது.

சிக்கனம்

தற்போதைய 17-வது மக்களவை அதிக தொகையை சேமித்ததற்கு கொரோனாவால் மக்களவை கூட்டங்கள் குறைக்கப்பட்டதும், சபாநாயகர் ஓம்பிர்லாவின் சிக்கன நடவடிக்கைகளுமே காரணங்கள் ஆகும்.

சபாநாயகர், மக்களவை செயலகத்தை காகித பயன்பாடற்ற அலுவலகமாக மாற்றினார். அவர் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியதால், எரிபொருள் செலவு தவிர்க்கப்பட்டது.


Next Story