அசாமில் உலக சாதனையாக ஒருகோடி மரக்கன்று நடும் திட்டம்


அசாமில் உலக சாதனையாக ஒருகோடி மரக்கன்று நடும் திட்டம்
x

அசாமில் உலக சாதனையாக ஒருகோடி மரக்கன்று நடும் திட்டத்தை முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தொடங்கி வைத்தார்.

அசாம் மாநில அரசு அடுத்த ஆண்டிற்குள் 8 கோடி விதைகளை விதைக்கவும், 2025-க்குள் 10 கோடி மரக்கன்றுகளை நடவும் இலக்கு நிர்ணயித்து உள்ளது. மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, 'அமிர்த பிரிக்ஷ்ய அந்தோலன்' என்ற பெயரில் இதற்கான திட்டத்தை கடந்த 9-ந்தேதி தொடங்கி வைத்தார். பசுமை அதிகரிப்பு மற்றும் பொருளாதார உயர்வை இலக்காக கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் அங்கமாக, ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் உலக சாதனை நிகழ்வை முதல் மந்திரி பிஸ்வா சர்மா, மாநில தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர்.

கன்றுகளை நடுவதுடன் நில்லாமல் பாதுகாப்பதற்கு வசதியாக பெரும்பாலும் இந்த கன்றுகள் தோட்டங்களிலும், வீடுகளிலும் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே இந்த கன்றுகளில் பெரும்பாலானவை மக்களால் பராமரிக்கப்பட்டு மரங்களாக வளர்ந்து பசுமை பெருகும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு வனப்பகுதி அல்லாத இடங்களில் 3 கோடி மரக்கன்றுகளையும், வனப்பகுதிகளில் 5 கோடி மரக்கன்றுகளையும் அரசு நடும் என்று முதல் மந்திரி அறிவித்தார்.


Next Story