எங்கள் கட்சிக்கு இது புதிது கிடையாது; எங்களது பலம் மக்கள் தான் - சரத் பவார் பேட்டி


எங்கள் கட்சிக்கு இது புதிது கிடையாது; எங்களது பலம் மக்கள் தான் - சரத் பவார் பேட்டி
x

எனது கட்சி பிரிந்தது என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் என்று சரத் பவார் கூறினார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றது குறித்து சரத் பவார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எங்கள் கட்சிக்கு இது புதிது கிடையாது, 1980-ல் கட்சியில் இருந்து 58 எம்எல்ஏக்கள் வெளியேறி வெறும் 6 எம்எல்ஏக்கள் மட்டுமே என்னுடன் இருந்தனர். பின்னர் மீண்டும் கட்சியை பலப்படுத்தி, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்தினேன். என்னை விட்டு விலகியவர்கள் தங்கள் தொகுதிகளில் தோற்றுப் போனார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்வது சபாநாயகரின் உரிமை. 3 நாட்களுக்குள் எதிர்க்கட்சி தலைவர் குறித்து காங்கிரஸிடமும், உத்தவ் தாக்கரேவிடம் பேசவுள்ளோம். எங்களின் முக்கிய பலம் சாமானிய மக்கள் தான், அவர்கள் தான் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

எனது கட்சி பிரிந்தது என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன், இந்த பிரச்சினை எனது கட்சி தொடர்பானது அல்ல, இது மக்களின் பிரச்சினை. வெளியேறியவர்களின் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படுகிறேன். இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன்.

எனது கட்சியை சேர்ந்த சிலர் தற்போது வேறொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், முக்கிய பிரச்னைகள் குறித்தும், ஜூலை 6ம் தேதி அனைத்து தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தேன்; ஆனால் அதற்குள் சிலர் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு முடிந்து போன கட்சி என்று கூறினார். தேசியவாத காங்கிரஸ் மீது நீர்ப்பாசன புகார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால் எனது கட்சியினர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அமைச்சராகியுள்ளனர். இதன் மூலம் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என நிரூபணமாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.!!" என்று கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நம்பத்தகுந்த முகமாக யார் இருப்பார்கள்?" என செய்தியாளர் கேட்டதற்கு, "கையை உயர்த்தி 'சரத் பவார்" என சரத் பவார் பதிலளித்தார்.


Next Story