மக்களவை பாதுகாப்பு குறைபாடு: 7 பேர் பணியிடை நீக்கம்


மக்களவை பாதுகாப்பு குறைபாடு: 7 பேர் பணியிடை நீக்கம்
x

கூடுதல் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது.

அதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி இருவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த அத்துமீறல் தொடர்பாக, பாதுகாப்பு பணியாளர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை பாதுகாப்பில் குறைபாடு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு அவைக்குள் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story