நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய 6வது நபர் கைது


நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய 6வது நபர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2023 11:38 AM GMT (Updated: 16 Dec 2023 11:40 AM GMT)

ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத் என்பவரை டெல்லி காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி,

கடந்த 13-ந்தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில், மதியம் ஒரு மணிக்கு நேரமில்லா நேர நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து, இரு இளைஞர்கள் குதித்து, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளை எடுத்து வீசினர்.

அவர்களைப்போல, வெளியேயும் ஒரு 42 வயது பெண்ணும், 25 வயது ஆணும் புகைக் குப்பிகளை வீசி கோஷங்கள் எழுப்பினர்.இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த நீலம், அமோல் ஷிண்டே, சாகர் ஷர்மா, மனோ ரஞ்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் மக்களவையில் புகைக்குப்பி வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனைத் தொடர்ந்து தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித் மோகன் ஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6வது நபரை டெல்லி காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத் என்பவரை டெல்லி காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

மகேஷ் குமாவத் அத்துமீறல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா மற்றும் நீலம் தேவியுடன் தொடர்பில் இருந்ததாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , மகேஷ் குமாவத் கடந்த 13ஆம் தேதி டெல்லி வந்துள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


Next Story