நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் ராகுல்காந்தி ஆஜராவதை முன்னிட்டு போலீஸ் குவிப்பு


நேஷனல் ஹெரால்டு வழக்கு:  அமலாக்கத்துறை முன் ராகுல்காந்தி ஆஜராவதை முன்னிட்டு போலீஸ் குவிப்பு
x

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை தொடர்பாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராக உள்ளார்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று காலை ஆஜராக உள்ளார். இந்தநிலையில் ராகுல்காந்தி வீட்டு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணி நடத்த காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகும்போது பேரணி நடத்தபோவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story