பாலியல் வழக்கில் அரசியல் தலையீடு; பாதிக்கப்பட்ட நடிகை கேரள கோர்ட்டில் மனு தாக்கல்


பாலியல் வழக்கில் அரசியல் தலையீடு; பாதிக்கப்பட்ட நடிகை கேரள கோர்ட்டில் மனு தாக்கல்
x

பாலியல் வழக்கில் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட நடிகை கேரள கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருவனந்தபுரம்,

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற பிரபல நடிகை கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பு முடிந்து கேரளாவில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் வழிமறித்தது.

அதன்பின்பு அந்த நடிகையின் காருக்குள் அத்துமீறி புகுந்து தகாத முறையில் நடந்து கொண்டது என குற்றச்சாட்டு எழுந்தது. பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் நீதியை உறுதிப்படுத்த நீதிமன்றம் தலையிட வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட நடிகை கேரள கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை அழித்தொழிப்பதற்கான ரகசிய முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் தெரிவித்து உள்ளார்.

அவர் அந்த மனுவில், இந்த வழக்கை முடிக்க ஆளும் கூட்டணியில் உள்ள அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நடிகர் திலீப்பின் வழக்கறிஞர்கள் சாட்சிகளை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், விசாரணை அதிகாரிகளால் விசாரிக்கப்படுவதில் இருந்து அவர்கள் (வழக்கறிஞர்கள்) விலக்கு அளிக்கப்பட்டு உள்ளனர்.

வழக்கை விரைந்து முடிப்பதற்கான ஒரு முயற்சி நடக்கிறது என தகவல் வந்துள்ளது. இதனால், நீதி மறுக்கப்படுவதற்கான சூழ்நிலையை உண்டு பண்ணுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்கை மூட விசாரணை குழு மீது அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த வழக்கின் குற்றவாளியான திலீப், அரசியல் செல்வாக்கு பெற்ற நபர். வழக்கின் இறுதி அறிக்கையை கைப்பற்றுவதற்கான முயற்சியும் நடந்து வருகிறது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் திலீப்புக்கு இடையேயான பிணைப்பே இதற்கு காரணம். திலீப்பின் வழக்கறிஞர்களை கேள்வி கேட்பதற்கான முயற்சி தடுக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அவரது வழக்கறிஞர்களின் அரசியல் செல்வாக்கே காரணம். எனக்கு கோர்ட்டுக்கு செல்வது தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story