அடுத்த ஜனாதிபதி யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை


அடுத்த ஜனாதிபதி யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 21 July 2022 1:01 AM GMT (Updated: 21 July 2022 1:52 AM GMT)

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.

பரபரப்பான சூழலில் கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்.பி.க்களும், நாடு முழுவதும் 30 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட்டனர்.

776 எம்.பி.க்கள் உள்பட 4,800-க்கு மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இதில் 99 சதவீதத்தினர் ஓட்டு போட்டனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக ஒட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு விமானங்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டன. அங்கு நாடாளுமன்ற கட்டிடத்தின் 63-வது அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. பலத்த பாதுகாப்புடன் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த வாக்கு எண்ணிக்கையை, தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநிலங்களவை செயலாளருமான பி.சி.மோடி மேற்பார்வையிடுகிறார்.

முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த சுற்று முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை பி.சி.மோடி வெளியிடுகிறார். பின்னர் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களின் வாக்குப்பெட்டிகள் திறந்து எண்ணப்படும். இதில் முதல் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டதும், 2-வது முறையாக வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை அவர் அறிவிப்பார்.

தொடர்ந்து 20 மாநிலங்கள் முடித்த பின் ஒரு முறையும், பின்னர் மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் இறுதி நிலவரத்தையும், தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதி யார்? என்ற விவரம் மாலைக்குள் வெளியாகும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் வேறு சில பிராந்திய கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன. அந்தவகையில் 44 கட்சிகள் முர்முவை ஆதரித்து இருந்தன. இதைத்தவிர வாக்குப்பதிவு நடந்த நாளிலும் எதிரணியை சேர்ந்த ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் திரவுபதி முர்முவுக்கு வாக்களித்து இருந்தனர்.

இதன் மூலம் திரவுபதி முர்முவே அடுத்த ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story