ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு


ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு
x

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.



புனே,



ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடையும் சூழலில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18ந்தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து இருவரும் மாநிலம்தோறும் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

இதுபற்றி உத்தவ் தாக்கரே கூறும்போது, பழங்குடியின பெண் ஒருவர் ஜனாதிபதியாக வாய்ப்பு பெறும் வகையில், திரவுபதி முர்முவுக்கு எங்களது ஆதரவை தெரிவிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதனை தொடர்ந்து அரசியல் தொடங்கும் என எனக்கு தெரியும். ஆனால், இதில் எந்த அரசியலும் இல்லை. கடந்த காலத்தில் நாங்கள் பிரதீபா பாட்டீலுக்கும் ஆதரவு அளித்துள்ளோம் என கூறியுள்ளார்.

எனது எம்.பி.க்கள் வற்புறுத்தி, கட்டாயத்தின்பேரில் இந்த முடிவை நான் எடுக்க வேண்டியிருந்தது என்று தகவல்கள் உலா வருகின்றன. இந்த முடிவுக்காக என் மீது எந்தவித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. இதில் எந்தவொரு அரசியல் கோணமும் இருப்பதுபோல் நாங்கள் எண்ணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story