ஜனாதிபதி தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு வெற்றி சான்றிதழை வழங்குகிறது இந்திய தேர்தல் ஆணையம்


ஜனாதிபதி தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு வெற்றி சான்றிதழை வழங்குகிறது இந்திய தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 22 July 2022 3:01 AM GMT (Updated: 22 July 2022 5:28 AM GMT)

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றிபெற்றுள்ள நிலையில் அதற்கான சான்றிதழை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்க உள்ளது.

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக ஜனாதிபதி வழங்குகிறர். நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி இவரே ஆவார்.

இதனிடையே, நாட்டின் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பணியாற்றி வரும் நிலையில் அவரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

அதன்படி, ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. இதில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட்டனர்.

தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 803 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்கா 3 லட்சத்து 80 ஆயிரத்து 177 வாக்குகள் பெற்றார்.

இதன் மூலம் 64 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்ற திரவுபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதியாகவும், முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். அதேபோல், பிரதிபா பாட்டீலுக்கு அடுத்ததாக நாட்டின் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் முர்மு பெற்றுள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை பொதுச்செயலாளர் பிரமோத் சந்திர மொடி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றிபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி பிரமோத் சந்திர மொடி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று சமர்ப்பிக்க உள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி சமர்ப்பித்த பின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திரவுபதி முர்முவிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வழங்குகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் அந்த சான்றிதழில் கையெழுத்திடுகின்றனர். அதன் பின்னர், அந்த சான்றிதழ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற திரவுபதி முர்முவிடம் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழ் மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


Next Story