பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை; துமகூருவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை


பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை; துமகூருவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:46 PM GMT)

பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் துமகூருவில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:

பிரதமர் மோடி வருகை

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. வருகிற மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை கவர பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த மாதம் (ஜனவரி) உப்பள்ளி, யாதகிரி மற்றும் கலபுரகியில் நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

ஹெலிகாப்டர் தொழிற்சாலை

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் துமகூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய பசுமைகள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கிறார். இங்கு முதல்கட்டமாக இலகுரக ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும்.

இந்த தொழிற்சாலையில் 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும்.

மின்சார வார விழா

அதற்கு முன்னதாக பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நடைபெறும் இந்திய மின்சார வார விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதை முடித்து கொண்டு அவர் ஹெலிகாப்டரில் துமகூருவுக்கு செல்கிறார்.

இதைெயாட்டி பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் துமகூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5 ஆயிரம் போலீசார் குவிப்பு

5 மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

துமகூருவில் 300-க்கும் மேற்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் விழாவுக்கு கட்சியின் தொண்டர்களை அழைத்து வர பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ளது.

இதனால் துமகூருவில் இன்று பொதுமக்களின் போக்குவரத்திற்காக பஸ்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் வேலை மற்றும் பள்ளி-கல்லுரிகளுக்கு செல்கிறவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

சர்வதேச விமான கண்காட்சி

பிரதமர் மோடி மீண்டும் வருகிற 13-ந் தேதி பெங்களூரு வந்து சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து இதே மாதம் வருகை தந்து சிவமொக்கா விமான நிலையத்தை தொடங்கி வைக்கிறார். இந்த மாதம் மட்டும் அவர் கர்நாடகத்தில் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story