அமுல் நிறுவனம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் செயல்முறை தொடக்கம் - அமித்ஷா தகவல்


அமுல் நிறுவனம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் செயல்முறை தொடக்கம் - அமித்ஷா தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2022 2:35 AM GMT (Updated: 10 Oct 2022 2:46 AM GMT)

அமுல் நிறுவனம் மற்றும் பிற 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கம் உருவாக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 3 நாள் பயணமாக கடந்த 7-ந் தேதி அசாம் மாநிலத்துக்கு சென்றார். அவர் கவுகாத்தியில் வடகிழக்கு கவுன்சிலின் 70-வது மாநாட்டில் கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அமுல் மற்றும் 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயற்கை பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சான்றிதழ் பெற்ற பின் தயாரிப்புகளின் ஏற்றுமதியை பல மாநில கூட்டுறவு சங்கங்கள் உறுதி செய்யும், இதனால் லாபம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, காங்டாக்கில் நடைபெற்ற வடகிழக்கு கூட்டுறவு பால் பண்ணை மாநாட்டில் அவர் பேசுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும், இது உள்நாட்டு சந்தையில் மட்டுமல்ல, அண்டை நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பால் விநியோகம் செய்ய பெரிய வாய்ப்பு உள்ளது. இந்த உலக சந்தையை ஆராய, அரசு பல மாநில கூட்டுறவு சங்கத்தை நிறுவுகிறது, இது ஏற்றுமதி நிறுவனமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story