பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் ஏவுதல் வெற்றி: செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது


பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் ஏவுதல் வெற்றி: செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது
x
தினத்தந்தி 22 April 2023 9:01 AM GMT (Updated: 22 April 2023 9:22 AM GMT)

இஸ்ரோ ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.

அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

செயற்கைத் துறை ரேடார் மூலம் 1 மீட்டர் தெளிவுத் திறனில் தரவை வழங்கும் திறன் கொண்ட டெலியோஸ்-2 செயற்கைக்கோள் 750 கிலோ எடை கொண்டது. டெலியோஸ்-2 செயற்கைக்கோள் மூலம் புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

இந்த நிலையில், தற்போது டெலியோஸ்-2 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. டெலியோஸ்-2 உடன் 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

இந்த நிலையில் இஸ்ரோ ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.


Next Story