பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்


பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
x
தினத்தந்தி 30 July 2023 9:54 AM GMT (Updated: 30 July 2023 10:08 AM GMT)

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சாட்' என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த 'டிஎஸ்-சாட்' செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கை கோள்கள் புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு மிகவும் நம்பகத்தன்மையுடையதாக இருப்பதாகவும், முழு வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு முதல் பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இஸ்ரோ அதிக விண்வெளி பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்த சோம்நாத், ஆகஸ்டு அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, ககன்யான் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் சோம்நாத் தெரிவித்தார்.


Next Story