ரெயில்வேயில் 35,281 காலியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு மார்ச் மாதத்துக்குள் பணிநியமன ஆணை வழங்கப்படும்: ரெயில்வே செயல் இயக்குநர் தகவல்!


ரெயில்வேயில் 35,281 காலியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு மார்ச் மாதத்துக்குள் பணிநியமன ஆணை வழங்கப்படும்: ரெயில்வே செயல் இயக்குநர் தகவல்!
x

ரெயில்வே மற்றும் உற்பத்தி துறைகளில் 35,281 காலியிடங்களுக்கு ரெயில்வே தேர்வு வாரியம் தேர்வுகள் நடத்தியுள்ளது.

புதுடெல்லி,

பல்வேறு மண்டல ரெயில்வே மற்றும் உற்பத்தி துறைகளில் 35,281 காலியிடங்களுக்கு ரெயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) தேர்வுகள் நடத்தியுள்ளது. மொத்தமுள்ள 21 ஆர்.ஆர்.பி. தேர்வுகளில் 17-க்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இது குறித்து இந்திய ரெயில்வேயின் செயல் இயக்குநர்(தகவல் மற்றும் விளம்பரம் பிரிவு) அமிதாப் சர்மா கூறுகையில், "இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை மார்ச் 2023க்குள், நிறைவடையும்.

அனைத்து தேர்வு நிலைகளின் முடிவுகளை தனித்தனியாக பெற ரயில்வே தயாராகி வருகிறது. அதனால் அதிகமான ரயில்வே ஆர்வலர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு தேர்வு முடிவு வெளியாகும் போது, ஒரே விண்ணப்பதாரர் பல்வேறு பதவிகளுக்கு தகுதி பெறுகிறார்.இதனால் தகுதியுடைய பலர் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். எனவே அனைத்து நிலை தேர்வுகளின் முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவதில்லை" என்றார்.

மீதமுள்ளவற்றுக்கான முடிவுகள் வெளியிடப்படும் கால அட்டவணையை ரெயில்வே வெளியிட்டு உள்ளது. இதில் 5-ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் நவம்பர் 3-வது வாரத்துக்குள் வெளியிடப்பட்டு, அடுத்த மாதம் 2-வது வாரத்துக்குள் சான்றிதழ் சரிபார்த்தலும், மருத்துவ பரிசோதனையும் முடிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் வாரத்துக்குள் பணியில் சேரலாம்.

4-ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 2-ம் வாரத்துக்குள் வெளியிடப்படும். பிப்ரவரி முதல் வாரத்துக்குள் சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை முடிக்கப்பட்டு, அதே மாதம் 4-வது வாரத்துக்குள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்.

3-ம் நிலை பணியிடங்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மார்ச் முதல் வாரத்துக்குள் முடிக்கப்படும். 2-ம் நிலை பணியிடங்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் அதே மாதம் 4-ம் வாரத்துக்குள் முடிவடையும் என ரெயில்வே கூறியுள்ளது.


Next Story