நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் எழுப்பினாலே மைக் அணைக்கப்படுகிறது; கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு


நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் எழுப்பினாலே மைக் அணைக்கப்படுகிறது; கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு
x

நாடாளுமன்றத்தில் நாங்கள் அதானி விவகாரம் பற்றி எழுப்பினாலே மைக் அணைக்கப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.


புதுடெல்லி,


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந்தேதி தொடங்கி நடந்தது. பிப்ரவரி 1-ந்தேதி, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். இதன்பின்னர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதனையடுத்து, பிப்ரவரி 11-ந்தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது.

இதன்படி, இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இதில், உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.

எனினும், இரு அவைகளில் எதிர்க்கட்சிகளின் அமளியால், மதியம் 2 மணிவரை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இதனை தொடர்ந்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதன்பின், நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மோடிஜியின் கீழ் சட்ட விதிகளோ, ஜனநாயகமோ இல்லை. சர்வாதிகாரம் போன்று அவர்கள் நாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதன்பின்பு, அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசி வருகின்றனர் என கூறியுள்ளார்.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம். நாங்கள் இந்த விவகாரம் பற்றி அவையில் எழுப்பும்போதெல்லாம், மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன.

அவையில் அமளி தொடங்கி விடுகிறது என கூறியுள்ளார். நாடாளுமன்ற மேலவை இன்று கூடியதும், லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவை முன்னவர் பியூஷ் கோயல் கூறியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதுபற்றி குறிப்பிட்ட கார்கே, அவையில் இல்லாத ஒருவரை பற்றி அவர்கள் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? அவை முன்னவர் 10 நிமிடங்கள் பேசுகிறார். எதிர்க்கட்சி தலைவருக்கு 2 நிமிடங்கள் கொடுக்கப்படுகின்றன. என்ன விதி இது? இது ஜனநாயகத்தின் முடிவு. இதுபற்றியே ராகுல் காந்தி லண்டனில் பேசினார் என்று கார்கே கூறியுள்ளார்.


Next Story