எனது தற்கொலைக்கு காரணம் மனைவியும் காதலியும் தான்... பேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலை செய்த ரிப்போர்ட்டர்


எனது தற்கொலைக்கு காரணம் மனைவியும் காதலியும் தான்... பேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலை செய்த ரிப்போர்ட்டர்
x
தினத்தந்தி 12 Aug 2023 11:55 AM GMT (Updated: 12 Aug 2023 12:27 PM GMT)

எனது தற்கொலைக்கு காரணம் மனைவியும் காதலியும் தான்... என பேஸ்புக்கில் பதிவிட்டு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

உதய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா (வயது 45). பத்திரிகை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவரது மனைவி பெயர் கவுசல்யா. இவர்களுக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆகின்றன. ஆனால் குடும்பத்தில் எந்நேரமும் சண்டை, சச்சரவு. இதனால் குடும்ப வாழ்க்கையில் வெறுப்புற்றிருந்தார் மிஸ்ரா.

இந்நிலையில், பின்சி பெரேரா என்ற பெண்ணுடன் மிஸ்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்த அறிமுகம் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த விவகாரம் மிஸ்ராவின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கவுசல்யா கோபமடைந்து சண்டைபோட்டு உள்ளார்.

எனினும் மிஸ்ரா தொடர்ந்து பெரேராவுடன் உறவில் இருந்து வந்தார். ஏற்கனவே தகராறும், பிரச்சனையும் குடும்பத்தில் அதிகரித்திருந்த நிலையில், கவுசல்யாவின் ஆவேசம் மேலும் கூடியது. தினமும் தகராறு செய்து உள்ளார்.

இதனால், மிஸ்ரா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இதற்கு நடுவில், மிஸ்ராவிடம், பெரேராவும் தகராறு செய்ய தொடங்கி உள்ளார். 2 பெண்களும் தினமும், ஆளுக்கு ஒரு பக்கம், சண்டை போடவும், உச்சக்கட்ட வெறுப்புக்கு ஆளானார் மிஸ்ரா. நேற்று மதியம் பெரேராவுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோதும் அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது.

சிறிது நேரத்தில், வீட்டிற்கு கிளம்பி சென்றார் மிஸ்ரா. வீட்டிற்கு சென்றதும் அங்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்திலேயே மிஸ்ரா பிணமானார்.

தற்கொலைக்கு முன்பு, பேஸ்புக்கில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மிஸ்ரா.. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"என் மரணத்திற்கு காரணம், மனைவி கவுசல்யாவும், காதலி பின்சி பெரேராவும்தான். இவர்கள் 2 பேரும் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய குழப்பம்தான் இந்த முடிவை எடுக்க வைத்துவிட்டது.

என் மனைவி கவுசல்யா எல்லா இடங்களிலும் என்னை அசிங்கப்படுத்தினார். இழிவாக நடத்தினார். அவரிடமிருந்து எனக்கு எந்தவிதமான சந்தோஷமும் கிடைக்கவில்லை. அதனால், அவரை விவாகரத்து செய்ய பலமுறை நினைத்தேன்.

ஆனால், என்னுடைய வயதான அம்மா, அப்பாவுக்காகவும், அவர்களின் மீதான மரியாதைக்காகவும், கவுசல்யா செய்யும் டார்ச்சரை எல்லாம் சகித்துக்கொண்டேன். அதற்கு பிறகு, அவரை பிரிந்து என்னுடைய வழியில் வாழ ஆரம்பித்தேன்.

அப்போதுதான், பின்சி பெரேராவை சந்தித்தேன். ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது. ஆனால், பெரேரா வீட்டிற்கு வந்ததுமே, கவுசல்யா இன்னும் என்னை கேவலமாக பேசினார். அதனால், நானும் பெரேராவும் நீண்டகாலமாக கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

ஒருகட்டத்தில், பெரேராவும், என் மனைவி கவுசல்யாவை பற்றி பேச ஆரம்பிக்க, எங்களுக்குள் சண்டை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.. கவுசல்யா என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார். பெரேராவும் என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்.

பெரேரா... நீயும் என் வாழ்வை பாழாக்கி விட்டாய்.. உங்க 2 பேராலும்தான் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story