ராஜஸ்தானில் ரூ.500-க்கு சிலிண்டர் திட்டம் : முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கி வைத்தார்


ராஜஸ்தானில் ரூ.500-க்கு சிலிண்டர் திட்டம் : முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கி வைத்தார்
x

ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.500-க்கு ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கி வைத்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று தொடங்கி வைத்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஏழைகளுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கெலாட் அறிவித்திருந்தார். சமீபத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.

"சேமிப்பும் நிவாரணமும் தான் ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டின் குறிக்கோளாகும். ரூ.500-க்கு சிலிண்டர் வழங்குவதன் மூலம் மக்களுக்கு நாங்கள் நிவாரணம் அளித்துள்ளோம். நாட்டில் உள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பும், சுகாதார பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்" என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் எதிர்க்கட்சியான பாஜக, முதல்-மந்திரி அசோக் கெலாட் அரசின் மானிய விலை சிலிண்டர் திட்டத்தை விமர்சித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தான் இன்றைய தேவை. அதைவிடுத்து சிலிண்டருக்கு மானியம் ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

ரூ.1150 மதிப்புள்ள சமையல் எரிவாயு சிலிண்டரை, 14 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.650 மானியம் விலையில் வழங்கினால் அரசுக்கு ரூ.60 கோடி செலவாகும் என்றும், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி 73 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினால் ரூ.1500 கோடி அரசுக்கு செலவாகும் என்றும் கூறப்படுகிறது.


Next Story