மைனர்பெண் பாலியல் பலாத்காரம்; 'போக்சோ'வில் தொழிலாளி கைது


மைனர்பெண் பாலியல் பலாத்காரம்; போக்சோவில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 6 Oct 2022 7:00 PM GMT (Updated: 6 Oct 2022 7:00 PM GMT)

கடபா அருகே மைனர்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மங்களூரு;


10-ம் வகுப்பு மாணவி

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா நூஜிபால்திலா பகுதியை சேர்ந்தவர் மைனர்பெண். இவரது தாய் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேறொருவருடன் ஓடிவிட்டார். மேலும் அவரது தந்தை தனியாக வசித்து வருகிறார். இதனால், மைனர்பெண் தனது தாத்தாவுடன் வசித்து வந்தார். இவர் அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நெல்லியாடி கிராமத்தை சேர்ந்தவர் கிரண். இவர் நூஜிபால்திலா பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் குழாய் பதிக்கும் பணி செய்து வந்தார். இவர், மைனர்பெண்ணின் வீட்டின் அருகே வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் பள்ளி மாணவியிடம் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். அதற்கு மைனர் பெண் மறுத்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

மேலும் மைனர்பெண் பள்ளிக்கு செல்லும் போது கிரண் அவரை மோட்டாா் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று பள்ளியில் கொண்டு விடுவதாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி மைனர்பெண்ணின் வீட்டுக்கு வந்த கிரண், அவரது தாத்தாவுக்கு மதுவாங்கி கொடுத்துள்ளார். மதுபோதையில் மைனர்பெண்ணின் தாத்தா தூங்கியதும், வீட்டுக்குள் சென்ற கிரண், மைனர்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதேபோல், கடந்த 26-ந்தேதியும் மைனர்பெண்ணை கிரண் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்த சிறுமி இதுபற்றி யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மைனர் பெண்ணிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

போக்சோவில் கைது

இதனால் மைனர்பெண்ணை அவரது தாத்தா ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மைனர்பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக அவரது தாத்தாவிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி மைனர்பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது மைனர்பெண் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து மைனர்பெண்ணின் தாத்தா, கடபா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிரணை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story