கடன்தாரர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு தர வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு


கடன்தாரர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு தர வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2023 12:00 AM GMT (Updated: 19 Aug 2023 9:47 AM GMT)

அடிக்கடி கடன் வட்டி அதிகரித்து வருவதால், கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மும்பை,

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5 தடவை அதிகரித்தது. மொத்தம் 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் வாங்கியவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுலப மாத தவணை (இ.எம்.ஐ.) அடிப்படையில், மாறுபடும் வட்டி விகிதத்தை கொண்ட தனிநபர் கடன்களை பொறுத்தவரை, வட்டி உயர்த்தப்படும்போதெல்லாம், வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமலும், சம்மதம் பெறாமலும், இ.எம்.ஐ. தொகை உயர்த்தப்படுவதாகவும், கடன் காலஅளவு நீட்டிக்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

ஆகவே, இந்த விஷயத்தில் வங்கிகள் உரிய கொள்கை நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

கடனுக்கு ஒப்புதல் வழங்கும்போதே, வட்டி உயர்ந்தால் இ.எம்.ஐ. தொகை உயரும் அல்லது கடன் கால அளவு நீட்டிக்கப்படும் என்பதை வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.

அதுபோன்று வட்டி உயரும்போது, இ.எம்.ஐ. தொகையை உயர்த்தினாலோ அல்லது கடன் கால அளவை நீட்டித்தாலோ அதையும் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துவிட வேண்டும்.

மேலும், வட்டி உயரும்போது, நிலையான வட்டி விகிதத்துக்கு (பிக்சட் ரேட்) மாறும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும். கடன் காலத்தில் எத்தனை தடவை மாறிக்கொள்ளலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

இ.எம்.ஐ. தொகையை உயர்த்துதல் அல்லது கடன் கால அளவை நீட்டித்தல் ஆகியவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை வாடிக்கையாளர்களின் முடிவுக்கே விட வேண்டும்.

கடனை முன்கூட்டியே பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ செலுத்தும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு காலாண்டின் இறுதியில், இ.எம்.ஐ. தொகையில் அசலுக்கு எவ்வளவு, வட்டிக்கு எவ்வளவு பிடிக்கப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை மாதங்கள் பாக்கி உள்ளன என்ற அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றுவதாக டிசம்பர் 31-ந் தேதிக்குள் வங்கிகள் உறுதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி 'நியாயமான கடன் நடைமுறை-கடன் கணக்குகள் மீது அபராத கட்டணம்' என்ற தலைப்பில் திருத்தப்பட்ட விதிமுறைகள் அடங்கிய மற்றொரு அறிவிப்பாணையையும் வெளியிட்டது.

அதில், வங்கிகள் மற்றும் வங்கிசாராத நிதிநிறுவனங்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளது. ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:-

அபராத கட்டணம் மற்றும் அபராத வட்டி வசூலிப்பதன் நோக்கம், வாடிக்கையாளர்கள் மனதில் கடனை திருப்பி செலுத்தும் எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இதை வருவாயை பெருக்கும் வழிமுறையாக வங்கிகளும், நிதிநிறுவனங்களும் கடைபிடிக்கக்கூடாது.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கடன் வட்டிக்கு மேல், கூடுதலாக அபராத வட்டி வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அபராத வட்டி வசூலிக்க தடை விதிக்கப்படுகிறது. இத்தடை, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கடன் ஒப்பந்த விதிமுறைகளை வாடிக்கையாளர் மீறும்போது, அபராதம் விதிக்க வேண்டி இருந்தால், அதை அபராத கட்டணமாகவே வசூலிக்க வேண்டும்.

அப்படி வசூலிக்கப்படும் அபராத கட்டணமும், கடன் நிபந்தனைகளை மீறியதற்கு பொருத்தமானவகையில், நியாயமானதாக இருக்க வேண்டும். அந்த கட்டணத்துக்கு வட்டி கணக்கிடக்கூடாது.

ஏற்கனவே விதிக்கப்பட்ட வட்டிக்கு மேல் கூடுதலாக அபராத வட்டி வசூலிக்கக்கூடாது. இருப்பினும், இந்த உத்தரவு, கடன் அட்டை, வர்த்தக கடன்கள் ஆகியவற்றுக்கு பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story