மாடியில் இருந்து தவறி விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் சாவு


மாடியில் இருந்து தவறி விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் சாவு
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:45 PM GMT)

நாகரபாவியில் மாடியில் இருந்து தவறி விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் இறந்தார்.

பெங்களூரு-

பெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகரபாவியில் வசித்து வந்தவர் ராம ஆஞ்சனேயா (வயது 63), ரியல்எஸ்டேட் அதிபர். இவர், 2 பெண்டாட்டிக்காரர் ஆவார். முதல் மனைவி பெயர் உமாதேவி ஆகும். அவர், பாகலகுன்டேயில் வசித்து வருகிறார். 2-வது மனைவி பெயர் கீதா ஆகும். இவர், நாகரபாவியில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தனது 2-வது மனைவி வீட்டில் ராம ஆஞ்சனேயா தங்கி இருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் மாடியில் இருந்து ராம ஆஞ்சனேயா தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனது கணவரை கீதா ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராம ஆஞ்சனேயா இறந்து விட்டார்.

தகவல் அறிந்ததும் அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது குடிபோதையிலும், தூக்க கலக்கத்திலும் மாடியில் இருந்து விழுந்து ராம ஆஞ்சனேயா இறந்துவிட்டதாக கீதா கூறியுள்ளார்.

அதே நேரத்தில் தனது கணவரை சொத்து விவகாரத்தில் மாடியில் இருந்து கீழே தள்ளி கீதா கொலை செய்துவிட்டதாக முதல் மனைவி உமாதேவி அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.



Next Story