கதகளிக்கு பெயர் பெற்ற கேரள கிராமத்தின் பெயர் மாற்றம்


கதகளிக்கு பெயர் பெற்ற கேரள கிராமத்தின் பெயர் மாற்றம்
x
தினத்தந்தி 24 March 2023 9:15 PM GMT (Updated: 24 March 2023 9:15 PM GMT)

கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி இந்திய பாரம்பரிய நடனங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி இந்திய பாரம்பரிய நடனங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும். கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்ரூர் என்ற கிராமம் கதகளிக்கு பெயர் பெற்ற கிராமமாக அறியப்படுகிறது.

பொதுவாக கதகளி நடனம் இந்து புராணங்களில் இருந்து கதைகளை கூறும். ஆனால் அய்ரூர் கிராமத்தில் பைபிளில் இருந்து வரும் 'ஆபிரகாமின் தியாகம்', 'ஊதாரி குமாரன்', 'மக்தலேனா மரியாள்' போன்ற கதைகளையும் அரங்கேற்றி இருப்பதால் கிறிஸ்தவ மதத்தினரிடமும் கதகளி நடனம் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாக விளங்குகிறது.

மேலும் அய்ரூர் கிராமம் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழமையான கதகளி பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே கதகளி நடனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கிராமத்தின் பெயரை 'அய்ரூர் கதகளி கிராமம்' என மாற்றம் செய்ய மாவட்ட கதகளி கிளப் கிராம பஞ்சாயத்திடம் கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று கிராமத்தின் பெயரை மாற்ற கடந்த 2010-ம் ஆண்டு கிராம பஞ்சயாத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக கிராமத்தின் பெயரை மாற்றும் செயல்முறை முடிவடைய கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகி விட்டது. அதன்படி தற்போது அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்ந்து, இந்திய வரைபடத்தில் அய்ரூர் கிராமம் 'அய்ரூர் கதகளி கிராமம்' என மாற்றப்பட்டுள்ளது.


Next Story