விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரி கைது


விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரி கைது
x
தினத்தந்தி 20 Aug 2023 6:45 PM GMT (Updated: 20 Aug 2023 6:45 PM GMT)

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு :-

ரூ.8 ஆயிரம் லஞ்சம்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா அரந்தோடு கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத். விவசாயி. இவர் தனது நிலம் தொடர்பான ஆவணங்களுக்கு பட்டா வழங்க அரந்தோடு வருவாய் துறையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை பரிசீலனை செய்த அதிகாரி மியாசாப் முல்லா என்பவர், ஹரிபிரசாத்திடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முதல்கட்டமாக ரூ.3 ஆயிரத்தை அவரிடம் ஹரிபிரசாத் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுபற்றி லோக் அயுக்தா போலீசாரிடம் புகார் அளித்தாா். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் அவருக்கு சில அறிவுரைகளை கூறினர்.

வருவாய் துறை அதிகாரி கைது

பின்னர் ஹரிபிரசாத், வருவாய் துறை அதிகாரி மியாசாப் முல்லாவை சந்தித்து லோக் அயுக்தா போலீசார் வழங்கிய ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை மியாசாப் முல்லா வாங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் மியாசாப் முல்லாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த லஞ்சப்பணம் ரூ.5 ஆயிரத்தையும், முதலில் கொடுத்த ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து மியாசாப் முல்லாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story