நாடு முழுவதும் ரூ.900 கோடி பணமுதலீட்டு மோசடி: 2 சீனர்கள் உள்பட 10 பேர் கைது


நாடு முழுவதும் ரூ.900 கோடி பணமுதலீட்டு மோசடி:  2 சீனர்கள் உள்பட 10 பேர் கைது
x

நாடு முழுவதும் ரூ.900 கோடி பணமுதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 2 சீனர்கள் உள்பட 10 பேர் ஐதராபாத் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



ஐதராபாத்,


நாட்டில் பல்வேறு இடங்களில் பணமுதலீடுகளில் மக்களை ஈடுபட செய்து, அவர்களை மோசடி செய்யும் கும்பலை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதனால், பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இதன்படி, நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் பிற பகுதிகளில் உள்ள கால் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதுபற்றி ஐதராபாத் நகர காவல் ஆணையாளர் சி.வி. ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, போலியான முதலீட்டு நிறுவனங்களின் நெட்வொர்க் கண்டறியப்பட்டு உள்ளது.

அந்நிறுவனங்கள் மொபைல் செயலிகளை கொண்டு முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர். அவர்களுக்கு கமிசன் பணம் தந்து வங்கி கணக்குகளையும் மோசடியாக பயன்படுத்தி உள்ளனர். இந்த பண முதலீட்டு மோசடியுடன் கம்போடியா, துபாய் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தொடர்பு உள்ளது.

நாடு முழுவதும் ஏறக்குறைய ரூ.903 கோடி மதிப்பிற்கு பெரிய அளவில் பண முதலீட்டு மோசடி நடந்து உள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சீனர்கள் உள்பட 10 பேரை ஐதராபாத் சைபர்கிரைம் போலீசார் கைது செய்து உள்ளனர்.

அவர்கள் இந்த பணபரிமாற்ற வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர். நாட்டில் நடந்த இதுபோன்ற மோசடிகளால் நம்முடைய பொருளாதாரம் பெருமளவில் பாதிப்பு அடையும் என்று ஆனந்த் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

தேச பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு தீங்கு தரும் அச்சுறுத்தலாக இருக்க கூடிய இதனை எதிர்கொள்ள போலீசார், நிதி அமைப்புகள் உள்ளிட்டோர் நல்லிணக்க அணுகுமுறையுடனும் மற்றும் ஒருங்கிணைந்தும் செயல்பட வேண்டும் என ஆனந்த் டுவிட்டரில் கேட்டு கொண்டார்.


Next Story