சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதம்: அசோக் கெலாட் அரசுக்கு புதிய தலைவலி


சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதம்: அசோக் கெலாட் அரசுக்கு புதிய தலைவலி
x

கோப்புப்படம்

சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் நடத்த உள்ளார். இது அசோக் கெலாட் அரசுக்கு புதிய தலைவலியாகி மாறி உள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகிறார். இது அசோக் கெலாட் அரசுக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது.

அசோக் கெலாட்-சச்சின் பைலட் மோதல்

முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் மூத்த தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது. இவர்களிடையே அவ்வப்போது மோதல் எழுவதும், அதில் மேலிடம் தலையிட்டு சமரசம் செய்வதும் தொடர்கதையாய் நீளுகிறது. ஆனாலும் மோதல் போக்கு நீறுபூத்த நெருப்பாக எப்போதுமே கனன்று கொண்டிருக்கிறது.

அரசுக்கு எதிராக போர்க்கொடி

தற்போதும் அந்த மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. குறிப்பாக தற்போதைய அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

இதுபற்றி ஜெய்ப்பூரில் நேற்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போத அவர் கூறியதாவது:-

முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா அரசின் ஊழல் தொடர்பாக தற்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தோம்.

உண்ணாவிரதப்போராட்டம்

தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள்தான் உள்ளன. ஏதோ சதி இருப்பதாக எதிரிகள் மாயையை பரப்பக்கூடும். எனவே இதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லை என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வார்கள்.

எனது கோரிக்கையை வலியுறுத்தி, நான் ஜெய்ப்பூரில் ஷாகீத் ஸ்மாரக்கில் 11-ந் தேதி (நாளை) ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகிறேன் என்று அவர் கூறினார்.

இந்த 11-ந் தேதி அசோக் கெலாட்டின் சைனி சமூகத்தைச் சேர்ந்த மகாத்மா ஜோதிர்பா பூலே பிறந்த நாள் ஆகும்.

பைலட்டுக்கு மந்திரி ஆதரவு

சச்சின் பைலட் கோரிக்கைக்கு, அசோக் கெலாட் மந்திரிசபையில் உணவுத் துறை மந்திரி பிரதாப் சிங் காச்சாரியாவாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தி சேனல் ஒன்றில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், "சச்சின் பைலட் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது எழுப்பிய பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, தற்போது மாநில அரசுக்கு உண்டு" என தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டிடம் பேசப்போவதாகவும், சச்சின் பைலட் எழுப்பி உள்ள கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம், அசோக் கெலாட் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story