உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமிக்கு குரங்கு அம்மை அறிகுறி மாதிரிகள் பரிசோதனை


உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமிக்கு குரங்கு அம்மை அறிகுறி மாதிரிகள் பரிசோதனை
x

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சிறுமியிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

காசியாபாத்,

உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள குரங்கு அம்மை, அது உருவான ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியே 30 நாடுகளில் பரவி உள்ளது. 550-க்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று நோய் தாக்கி இருக்கிறது. இந்தியாவில் இதுவரை இந்த நோய் நுழைந்ததாக அதிகாரபூர்வ தகவல் இல்லை.

ஆனால் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு இந்த குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் (கொப்புளங்கள், தோல் அரிப்பு) தென்படுவதாக ஒரு கிளினிக்கில் இருந்து சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த சிறுமிக்கு காய்ச்சலோ, தலைவலியோ இல்லை. வெளிநாடு எங்கும் சென்று வந்ததும் இல்லை. தொற்று பாதிப்பில் இருந்தோருடன் அந்த சிறுமிக்கு தொடர்பும் கிடையாது.

இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சிறுமியிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் வெளிவரும் வரை, குழந்தையை தனிமைப்படுத்தி வைத்திருக்கும்படி குடும்பத்தினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவல்களை காசியாபாத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.


Next Story